Monday, May 29, 2017

அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் வரலாறு...

அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன்  கோவில் வரலாறு...

பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு ஶ்ரீ பட்டாளம்மன் கோவில்
தமிழ்நாடு, கோவை மாவட்டம், வடக்கு வட்டத்தில் கோவை மாநகரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் 20கிமீ தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் கஸ்தூரிபாளையம் செல்லும் சாலையில் 13வது வார்டில் அருள்மிகு ஶ்ரீ பட்டாளம்மன் கோவில் உள்ளது.
பட்டாளம்மன்:அகிலத்திலேயே அதிக கோவில்களைக் கொண்ட ஒரே பெண் தெய்வம்.மாரியம்மன், மாகாளியம்மன், பத்திரகாளியம்மன்,அங்காளம்மன் எனக் கூறப்படும் ஏழுசகோதரிகளுடன் பிறந்தவள்.எல்லோருக்கும் மூத்தவள். எல்லா நிலைகளிலும் பட்டத்திற்குரிய பெருமை பெற்ற தெய்வமென்பதால் இவளை பட்டாளம்மன் என்றும்,பட்டத்தரசி என்றும் பொதுமக்கள் அழைக்கின்றனர். குறிப்பாக பொன்னி வளநாடு,பொன்னர் சங்கர்,நல்லதங்காள் உள்ளிட்ட கிராமத்து தெய்வங்களுடன் மிகுந்த காலத் தொடர்புடைய தெய்வம்.தமிழகம்,ஆந்திரா, கர்நாடகா,கேரளா மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் குடியிருக்கும் தெலுங்கு மொழி பேசும் அடித்தட்டு மக்களைப் பாதுகாக்கும் வகையில் அங்கெல்லாம் தவறாமல் கோவில் கொண்டுள்ள காவல் தெய்வம் பட்டாளம்மன்.
பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான திருக்கோவில் முன்பு பாறைகளால் உருவாக்கப்பட்டிருந்தது.பின்னர் பெரியோர்கள் அதனை ஓட்டுக் கட்டிடமாக மாற்றி வணங்கி வந்தனர்.பின்னர் 2001 ஆம் ஆண்டு புதிதாக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு கருவறை,அர்த்த மண்டபம்,மகா மண்டபம் என சிறப்பாக முறையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உள்ளே கருவறையில் பட்டாளம்மனின் திருமேனி பாங்குற அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் கஜலட்சுமி தெய்வ ரூபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மகா மண்டபத்தில் இடது புறம் ஶ்ரீவிநாயகர் சிலையும்,வலது புறம் ஶ்ரீமுருகன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.மண்டபத்தில் நடுவில் சிங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்பு முனியப்பசுவாமி சிலை உள்ளது.வாசலில் வேல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.கோவிலுக்கு அருகிலேயே வடக்குப் புறத்தில் அரச மரத்திற்கு அடியில் முத்துவிநாயகர் ஆலயம் உள்ளது.அதற்கு பின்னால் கன்னிமார் தெய்வங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வளர்பிறை திருநாளில் பூச்சாட்டு எனப்படும் 15 நாள் உற்சவப் பெருவிழா நடக்கிறது. வருடந்தோறும் மார்கழிமாத சிறப்பு திருப்பாவை பஜனை தவறாமல் நடக்கிறது. வாராந்திர வெள்ளிக்கிழமை,ஆடிமாத வழிபாடு,தைப்பூச விழா, கார்த்திகை தீப விழா,அமாவாசை,பௌர்ணமி,பிரதோச காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.1 மணி நேரத்திற்கொருமுறை கோவிலுக்கு வர பேருந்து வசதி உள்ளது.


அம்மனின் சக்தி : பட்டாளம்மன் தன்னை அண்டியோருக்கு வாழ்வளிப்பவள்.தன்னை ஏசியோருக்கோ உடனே அதற்குரிய தண்டனையும் அளிப்பவள்.ஒருமுறை பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது முனியப்பன் பூஜையின்போது துஷ்ட சக்திகளை விரட்டுவதற்காக நள்ளிரவு நேரத்தில் ஊர்முழுவதும் ஆட்டின் ரத்தம் கலந்த ரத்தசோற்றை பேய்களுக்கு வீசுவர்.ஊர்முழுக்க வலம் வந்து நடைபெறும் இதில் ரத்தசோறு வீசுகின்ற பக்தர் கோவிலுக்கு அருகிலுள்ள கிராமத்தில் வீசிக்கொண்டிருந்தபொழுது அங்கிருந்த ஒரு ஒரு வீட்டின் மீது ரத்தசோறு விழுந்தவிட்டது.அந்த வீட்டின் உரிமையாளரம்மா காலையில் அதனைப் பார்த்து உடனே பட்டாளம்மன் கோவிலுக்கு முன்பு வந்து நின்று கொண்டு ஏளனமாகவும், அவதூறாகவும் பேசினார்.அதே நாள் மாலை நேரத்தில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள எல்.எம்.டபிள்யு பிரிவில் பஸ் ஏறும்போது விபத்தில் சிக்கி,கால் இழந்து இறந்துபோனார்.மற்றொரு சமயம் கோவிலுக்கு சேவகம் செய்யும் அடியவர் தைப்பூசத் திருநாளன்று தன்னுடைய விரலில் அணிந்திருந்த தங்கமோதிரத்தை கழற்றி கீழே வைத்து விட்டு பழஅபிஷேகம் தயார் செய்துள்ளார்.கை கழுவச் சென்றுவிட்டு பின்னர் வந்து பார்க்கும்போது அதனைக் காணவில்லை.அந்த அடியவரும் சரி,நமகென்று அது இருந்திருந்தால் நம்மிடமே தங்கியிருக்கும்.கிடைத்தால் கிடைக்கட்டும் என விட்டுவிட்டார்.சுமார் 4 மாதங்கள் கழித்து கோவிலில் உள்ளே வைக்கப்பட்டிருந்த அணிக்கூடையில் விபூதி எடுக்க முற்படும்போது அதே தங்கமோதிரம் உள்ளே இருந்தது.நான்கு மாதங்களுக்கு பின் அதே அடியவர் கண்ணில் படவைத்து தங்க மோதிரத்தை கிடைக்கச் செய்த சக்திதான் இந்த ஶ்ரீ பட்டாளம்மன்.இன்னும் பல திருவிளையாடல்கள் இக்கோவிலில் நடந்துள்ளது.அம்மனை மனதார நம்பித் தொழுவோமாக.. 

1 comment:

  1. Play Free Casino Games for Money (2021)
    Free Casino Games with No Deposit Needed — With these games you can play free casino games to build a 카지노사이트 winning streak. And 우리카지노 like most other free casino games,

    ReplyDelete